۞ அல் குர்ஆன் தெளிவுரைஅல்-குர்ஆன் – மனிதப் பிரச்சினைகள் அனைத்திற்கும் வழிகாட்டுதலும் தீர்வும்
English
87

அல் ஆலா

மிக்க மேலானவர்கள்

A'la

Surah 87  ·  19 வசனங்கள்

الأعلى
۞

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

87:அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)

87:1

سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى١

87:1. சமூக நலத் தொண்டரே! உன்னைப் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவனின் வழிகாட்டுதலின்படி உருவான ஆட்சியமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதில் வேகத்தைக் காட்டு.

87:2

ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ٢

87:2. அனைத்தையும் படைத்து செவ்வை ஆக்கிய அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டு.

87:3

وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ٣

87:3. ஏக இறைவனாகிய அல்லாஹ் தான், உலகிலுள்ள அனைத்தையும் படைத்ததோடு அவற்றின் ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விதிமுறைகளையும் நிர்ணயித்தது.

எனவே மனிதனின் செயலுக்கு ஏற்றவகையில் பலன்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தும் படியாகவே அவை படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு படைத்தவனின் செயல்திட்டத்தை நிறைவேற்ற தீவரம் காட்டு.

87:4

وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ٤

87:4. இறைவனுடைய படைப்பினங்களின் வரிசையில் கால்நடைகளுக்கும் உரிய பசுமை நிறைந்த தீவனங்களும் அடங்கும்.

87:5

فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ٥

87:5. அதே பயிர்களை பூமியிலிருந்து பிடுங்கி தனியே எடுத்துவிட்டாலோ அல்லது அது முழுஅளவில் வளர்ந்த பின்பும் அப்படியே விட்டாலோ அது உலர்ந்து கூளங்களாக மாறிவிடுகிறது.

இந்த விளைச்சல்களில் பசுமையும் வறண்ட நிலையும் என்ற இரு வெவ்வேறு தன்மைகள் உள்ளன. அது போல ஒரு சமுதாயம் இறைவழிகாட்டுதலோடு தொடர்பு வைத்திருக்கும் வரை சீறும் சிறப்புமாக இருக்கும். அந்த உறவை துண்டித்துக் கொண்டால் காலப் போக்கில் அழிந்து போய் விடும். (பார்க்க 18:7-8)

உலகிலுள்ள மற்ற ஜீவராசிகளுக்கு இருப்பது போல் பிறப்பு, வளர்ப்பு, மரணம் போன்ற சட்டங்களே மனித விஷயத்திலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் மற்ற படைப்புகளுக்கு அவற்றின் கடமைகளைப் பற்றிய ஞானம் அவற்றுள் வைக்கப்பட்டது போல் மனிதனுள் வைக்கப்படவில்லை. மனிதனுக்கு இந்த ஞானம் வஹீ என்னும் இறைவழிகாட்டுதல்கள், இறைத் தூதர்கள் மூலமாக கிடைக்கிறது. எனவே

87:6

سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ٦

87:6. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இந்தக் குர்ஆனின் அடிப்படையில் தான் அனைவருக்கும் நீர் விளக்கம் அளிக்கின்றீர் (10:15) மேலும் இந்த வழிகாட்டுதல்கள், உன் வாழ்வோடு ஒன்றிவிட்டது. (43:43) எனவே அதில் எதையும் நீர் மறக்கமாட்டீர்.

87:7

إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ٧

87:7. ஒரு வேளை இந்த வஹீச் செய்திகளில் சிலதை நீர் மறந்தும் போகலாம் என்று அல்லாஹ்வின் “மஷீயத்” என்னும் செயல் திட்டம் இருந்திருந்தால், (17:73-76) அவ்வாறு நீர் மறந்தும் இருக்கலாம். ஆனால் “மஷீயத்" என்னும் அல்லாஹ்வின் செயல்திட்டம் அவ்வாறில்லை. எனவே அவற்றில் நீ எதையும் மறைக்கவோ அல்லது அதற்கு மாற்றமாக செயல்படவோ மாட்டீர். அப்படி செயல்படக் கூடாது என்பது தீர்மானிக்கப்பட்ட சொல் ஆகும். (46 : 9)

எனவே இந்த வழிகாட்டுதல்கள் யாரிடமிருந்து வந்துள்ளன என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். மனிதனுள் மறைந்து கிடக்கும் ஆற்றல்கள் என்ன? மனிதனால் எதையெல்லாம் செய்யமுடியும் என்ற நுண்ணறிவு பெற்ற இறைவனிடமிருந்து அருளப்பட்டவை ஆகும். எனவே இறைவனுடைய வழிகாட்டுதல்கள் எல்லா வகையிலும் முழுமையாக்கப்பட்டு விட்டது. மனிதனுக்கு எந்த அளவிற்கு வழிகாட்டுதல்கள் அளிக்க வேண்டுமோ அந்த அந்த அளவிற்கு அளிக்கப்பட்டு விட்டன. இறைத்தூதர் வஹீச் செய்திகளை மறக்க மாட்டார் என்பதோடு மட்டும் விஷயம் நின்றுவிடவில்லை. இதன் அடிப்படையில் ஒரு சமுதாயத்தையும் உருவாக்குவார்.

87:8

وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ٨

87:8. அதற்காக இறைவழிகாட்டுதல் அனைத்து வழிமுறைகளையும் எளிதாக்குகிறது. இப்படியாக இந்த மார்க்கம் முழுமை பெற இறைவனின் உதவி கிடைத்து விடுகிறது.

எனவே நீர் இறைவழிகாட்டுதலை மக்களிடம் பிரச்சாரம் செய்து வருவீராக. அதே சமயம் இந்த அறிவுரைகளை ஏற்று பயன்பெற முன்வராதவர்களைப் பார்ப்பீர். நீ அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடு. (15:85) (73:10) அதாவது

87:9

فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ٩

87:9. உன்னுடைய போதனைகளையும் அறிவுரைளையும் யாருக்கு எடுத்துரைத்தால் பலனளிக்குமோ, அவர்களுக்கு தொடர்ந்து எடுத்துரைக்கவும்.

87:10

سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ١٠

87:10. ஏனெனில் முன்னெச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள விரும்புவோருக்குத் தான் இந்த அறிவுரைகள் பலனளிக்கும். தம் வாழ்வின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க நாடுவோரிடமே இந்த அறிவுரைகள் பலனளிக்கும்.

87:11

وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى١١

87:11. இதைவிட்டு ஒதுங்கிக் கொள்ள நாடுவோர், உம்மையோ மற்றவர்களையோ எந்த நஷ்டத்தையும் ஏற்படுத்த முடியாது. மாறாக அவர்களே தம் வாழ்வில் நிலையான சுகம் காண முடியாத துர்பாக்கியவான்கள் ஆவார்கள்.

87:12

ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ١٢

87:12. அவர்களுடைய வாழ்வு வேதனைமிக்க அழிவின் பக்கம் சென்றுவிடும். அவர்கள் அனைத்தையும் இழந்து பரிதவிப்பார்கள்.

87:13

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ١٣

87:13. அந்த துயரங்களில் மனிதனுடைய நிலைமை எவ்வாறு ஆகிவிடும் என்றால் அவன் இதிலிருந்து தப்பிக்க சாக நினைத்தாலும் மரணம் அவனை நெருங்ககாது. (14:17) மேலும் அவர்களை உயிருடன் வாழ்வதாகவும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. (20:74)

87:14

قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ١٤

87:14. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! தற்காலிக சந்தோஷங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழாமல், வருங்கால நிலையான மனித நேயத்தை கட்டிக் காக்கும் எண்ணங்களுடன் வாழ்பவர்களின் விவசாயம் தான் பெருகி பல்கும்.

87:15

وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ١٥

87:15. இறைவனின் குணநலங்களை கூடுமானவரை தம்முள் வளர்த்துக் கொண்டு, முழுஅளவில் செயல்படுபவர்கள் மட்டுமே, இந்த சமுதாயம் வேகமாக முன்னேறுவதை காண்பார்கள். மேலும் அங்கு மனித நேயமும் உச்ச நிலையை அடையும். அப்போது தான் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவழிகாட்டுதலை முன்வைத்தே அவர்கள் முடிவெடுப்பார்கள். (பார்க்க 2:138)

87:16

بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا١٦

87:16. இறை நெறிமுறைகளை எதிர்ப்பவர்களிடம், “நீங்கள் அனைவரும் தற்காலிக சுகங்களை முன்வைத்தே வாழ்க்கைத் திட்டங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளீர்கள்.

87:17

وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ١٧

87:17. தற்காலிக பலன்களுடன் ஒட்டுமொத்த சமூதாயத்தின் வருங்கால நலத் திட்டங்களையும் முன்வைத்து செயல்பட்டால், உங்கள் வாழ்க்கை பன்மடங்கு சிறப்பாக இருக்கும். நிலையான பலன்களையும் பெற்றுக் கொள்வீர்கள்” என்று அவர்களிடம் எடுத்துரையுங்கள்.

அதாவது தற்காலிகப் பலன்களைத் தரும் செயல்கள் வருங்கால நிலையான பலன்களை பாதிக்கக் கூடியதாக இருந்தால், வருங்கால நலனைக் கருதி, அவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு மதுக் கடைக்கு அனுமதி அளித்தல். அவை அரசுக்கு தற்காலிக வருவாயை ஈட்டித் தரலாம். ஆனால் வருங்காலத்தில் சமுதாயமே சீரழிந்து விடும். எனவே இவற்றை அரசு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

87:18

إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ١٨

87:18. இந்த பேருண்மையை இந்த குர்ஆனில் மட்டும்தான் முதன் முதலில் உலகத்தார் முன் கொண்டு வரப்படுவதாக எண்ணாதீர்கள். இவை காலம் காலமாக இறைவன் புறத்தலிருந்து அளிக்கப்பட்ட அறிவுரைகளே ஆகும்.

87:19

صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ١٩

87:19. குறிப்பாக இப்றாஹீமுக்கு அளிக்கப்பட்ட சமய நூலிலும் அதன்பின் மூஸாவுக்கு அளிக்கப்பட்டதிலும் இதே அறிவுரைகள் தரப்பட்டன. (53:36-37)(42:13)அது மட்டுமின்றி உலகம் முழவதும் அவரவர் பேசும் மொழிகளிலும் அனுப்பப்பட்டன (14 : 4)